ஜுலை,31-

தக்காளியும், தங்கமும் எப்போது விலை கூடும், எப்போது குறையும் என்று வணிகர்களால் கணிக்க முடியாத வஸ்துவாக உள்ளன.

இப்போது தக்காளிக்கு பொற்காலம்.

தமிழக சந்தை சரித்திரத்தில் இதுவரை இல்லாத வகையில், ஒரு மாதத்துக்கும் மேலாக தக்காளி விலை உயர்வு நீடித்து சில்லறை கடைகளில் ஒரு கிலோ 220 ரூபாய் வரை விற்பனை ஆகிறது.

காயம் பட்டு யாருக்காவது ரத்தம் வழிந்தால்,’முகத்தில் என்ன தக்காளி சட்னியா?’ என கேட்க முடியாது.

சென்னை கோயம்பேடு, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, மதுரை மாட்டுத்தாவணி, திருப்பூர் தென்னம்பாளையம், கோவை மலுமிச்சம்பட்டி சந்தை போன்றவை தக்காளி வியாபாரத்துக்கு பேர் போனவை. இங்கு நிர்ணயிக்கப்படும் விலையே பிற மாவட்டங்களில் நிர்ணயிக்கப்படுகிறது.

சாகுபடியில் முன்னிலையில் உள்ள தமிழகம், கர்நாடகம்,ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் பெய்த மழையால் தக்காளிச் செடிகள் அழிந்தன.  இதனால் ராக்கெட் வேகத்தில் தக்காளி விலை உயர ஆரம்பித்தது..

தக்காளி விலை எப்போது தான் குறையும்?

மதுரை மாட்டுத்தாவணியில் தக்காளி வியாபாரம் செய்யும் வியாபாரிகளிடம் கேட்டபோது அவர்கள் சொன்ன விளக்கம் இது:

“ஒரு மாதத்துக்கும் மேலாக தக்காளி விலை குறையாமல் இருக்கிறது. இதுபோல தொடர்ந்து விலை உயர்ந்து நாங்கள் பார்த்ததில்லை.  தமிழகத்தில் தக்காளி அறுவடை தொடங்கி உள்ளது. ஆனால், கர்நாடகா, ஆந்திராவில் மழை நின்றபாடில்லை. அதனால் 2 மாநில வியாபாரிகளும் தமிழக தக்காளியை கொள்முதல் செய்வதால் விலைதாறுமாறாக ஏறியுள்ளது.

ஐந்தாறு நாட்களில் ஆந்திராவின் அனந்தபூர், கர்நாடகாவின் கல்யாண துர்கா, தாவண்கரே உள்ளிட்ட இடங்களில் இருந்து, நமக்கு தக்காளி வரத்து தொடங்கிவிடும். எனவே இன்னும் 15 நாட்களில் விலை குறைய வாய்ப்புள்ளது’’ என நம்பிக்கை விதை விதைத்தனர்.

காத்திருப்போம்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *