தமிழகம், புதுச்சேரியில் 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் – இன்று காலை 10 மணிக்கு வெளியீடு

மே.19

தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 10ம் வகுப்பு, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்தது. அதன்படி, 12ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய மாணவ-மாணவிகளுக்கான தேர்வு முடிவு கடந்த 8-ந்தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 11 மற்றும் 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான தேர்வு முடிவுகளை தனித்தனியாக வெளியிட அரசு தேர்வுத் துறை திட்டமிட்டு இருந்தது.

இந்த நிலையில் இரண்டு தேர்வு முடிவுகளையும் ஒரே நாளில் வெளியிட ஆலோசித்து வருவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருந்தார். அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இன்று வெளியிடுகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11ம் வகுப்பு தேர்வை 7 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 8 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் எழுதியுள்ளனர்.

அதன்படி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இன்று காலை 10 மணிக்கு தேர்வுத்துறை வெளியிடுகிறது. மாணவ-மாணவியர் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் சென்று அறிந்து கொள்ளலாம். இதைத் தொடர்ந்து, பிற்பகல் 2 மணிக்கு 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது. பொதுத்தேர்வு மதிப்பெண் விவரங்களை, மாணவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *