தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு – உடுமலை விவசாயிகள் வேதனை!

ஏப்ரல்.27

உடுமலையில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், ஒரு கிலோ தக்காளி 2 முதல் 5 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில், தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. இங்கு விளையும் தக்காளி, உடுமலை நகராட்சி சந்தைக்கு கொண்டு வந்து, ஏல முறையில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இதை கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. உடுமலையில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை நடைபெற்றுவருகிறது.

இதனால், சந்தைக்கு, நாளொன்றுக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தக்காளி பெட்டிகள் வருகின்றன. இது படிப்படியாக அதிகரித்து, நாளொன்றுக்கு 1.50 லட்சம் பெட்டிகள் வரை வரத்து இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வரத்து அதிகரிப்பால், தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. 14 கிலோ கொண்ட பெட்டி, கடந்த மாதம், 300 ரூபாய் வரை விற்பனையான நிலையில், தற்போது, 40 முதல், 70 ரூபாய் வரை விலைபோகிறது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக பேசிய விவசாயிகள், தக்காளி சாகுபடிக்கு, 60 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. கடும் வறட்சி, திடீர் மழை காரணமாக, நடப்பாண்டு மகசூல் குறைந்துள்ளது. தக்காளி பறிப்பு கூலி, வண்டி வாடகை, கமிஷன் என, பெட்டிக்கு, 30 ரூபாய் வரை செலவாகிறது. ஒரு கிலோ, 2 முதல் 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், நடப்பு சீசன் தக்காளி சாகுபடியால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *