கோவையில் வேகமெடுக்கும் கொரோனா – தொற்று பாதித்த 2 பேர் ஒரே நாளில் பலி

கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த 2 பெண்கள் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த மாத இறுதியில் இருந்து கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவருகிறது. தற்போது, கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதும், உயிரிழப்புகள் ஏற்படாமல் இருந்தது மக்களிடையே ஆறுதலாக இருந்துவந்தது.

இந்த நிலையில், கோவை வடவள்ளியை சேர்ந்த 56 வயது பெண் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரானா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கடந்த மாதம் 30-ந் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோல் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த மாதம் 23-ந் தேதி கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவரும் நேற்று சிகிச்சை பலனின்றி பலியானார்.

ஏற்கனவே, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 55 வயது பெண் ஒருவர் கடந்த வாரம் உயிரிழந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 2 பெண்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ள சம்பவம் கோவை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *