ஊருக்குள் புகுந்த பாகுபலி யானை! – மேட்டுப்பாளையம் அருகே பரபரப்பு..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் பாகுபாலி யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள சமயபுரம் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்த கிராமம் மேட்டுப்பாளையம்-வனப்பத்திரகாளியம்மன் கோயில் செல்லும் சாலையில் உள்ளது.

இந்நிலையில், அருகிலுள்ள நெல்லிமலை வனப்பகுதியிலிருந்து தினமும் உணவு, குடிநீர் தேடி காட்டு யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களையும், விவசாயிகளையும் அடிக்கடி அச்சுறுத்தி வருகின்றன. 3 மாதங்களுக்கு பின் பாகுபலி யானை வனப்பகுதியிலிருந்து வெளியேறி நெல்லிமலை, சமயபுரம் பகுதியில் மீண்டும் சுற்றி திரிகிறது. கடந்த சில நாட்களாக இரவில் மட்டுமே ஊருக்குள் வந்த யானை, நேற்று முதல் பகல் நேரத்திலும் கிராமப் பகுதியில் உலா வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். மேலும் யானை செல்லும் வழியில் உள்ள விளைநிலங்களை சேதப்படுத்துவதுடன், வீட்டில் இருக்கும் பொருட்களையும் அடித்து நொறுக்கி அட்டூழியத்தில் ஈடுபட்டுவருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பகல் நேரத்தில் குடியிருப்புப் பகுதியில் சுற்றித்திரியும் பாகுபலி யானையை, மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் விரைந்து எடுக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *