விமான நிலையத்தில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு – கோரிக்கை மனு அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநிலத்தின் முக்கிய பிரச்சனைகள் தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார்.

தமிழகத்தில் சென்னை- கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்றார். பின்னர், மைசூர் திரும்புவதற்கான சென்னை விமானநிலையத்திற்கு சென்ற மோடியை, தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் சந்தித்து 20 நிமிடங்கள் வரை பேசினார்.

அப்போது, மாநிலத்தின் முக்கியப் பிரச்சனைகள் தொடர்பான கோரிக்கை மனுவை பிரதமரிடம் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.அந்த மனுவில், சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு பங்களிப்பை வழங்கவேண்டும். தமிழ்நாட்டில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டுகள், நிகழ்வுகளை நடத்த வேண்டும். விமானநிலைய விரிவாக்கத்திற்கான பாதுகாப்புத்துறை நிலங்களை இலவசமாக வழங்க வேண்டும். ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரை புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். காலணி உற்பத்திக்கான புதிய உற்பத்தி சார்ந்த ஊக்கச்சலுகை திட்டம் வழங்க வேண்டும்.


தமிழ்நாட்டில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சாதிப்பட்டியலில் “ன்” மற்றும் “க” என முடிவடையும் பெயர்களை “ர்” விகுதியுடன் மாற்ற வேண்டும். பி எம் மித்ரா பூங்காவின் முதன்மை மேம்பாட்டாளராக சிப்காட்டை நியமிக்க வேண்டும். கடலோர காற்றாலை மின்னுற்பத்தியின் பெரும்பங்கை தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டும்.

ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும். சென்னையில் விளையாட்டு ஆணையத்தின் மண்டல மையத்தை அமைக்க வேண்டும்.சுங்கக்கட்டணம் வசூலிப்பதில் உள்ள முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு சம குடியுரிமை, அரசியல் உரிமைகள் வழங்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். பாக். வளைகுடாவில் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *