மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம் – இன்று எதிர் சேவை நிகழ்ச்சி

மே.4

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாத் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இன்று அழகரை எதிர்கொண்டு மக்கள் வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி இன்று நடக்கிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகப்புகழ் பெற்றது. அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அதைத் தொடர்ந்து, நாள்தோறும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கடந்த 2ம் தேதி காலை கோலாகலமாக நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, நேற்று மீனாட்சி-சுந்தரேசுவரர் திருத்தேரோட்டம் நடந்தது. இதையொட்டி, மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் அதிகாலையில் கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் இருந்து கீழமாசி வீதியில் உள்ள தேரடி மண்டபத்திற்கு வந்தனர். அங்கு உள்ள கருப்பணசாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் பெரிய தேரில் சுந்தரேசுவரரும், சிறிய தேரில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளினர்.

இதனிடையே, மதுரை அழகர்கோவிலில் சித்திரைத்திருவிழா கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வாகும். இதற்காக, நேற்று மாலை 5.50 மணிக்கு கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். மாலை 6 மணி அளவில் அங்குள்ள கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு நூபுர கங்கை தீர்த்த அபிஷேகம், தீபாராதனை, பூஜைகள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து 6.50 மணி அளவில் கண்டாங்கி பட்டு உடுத்தி, நெற்றி பட்டை, கரங்களில் வளைதடி, நேரிக்கம்பு, பரிவாரத்துடன் மேள, தாளம் முழங்க தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார் கள்ளழகர்.

இந்நிலையில், இன்று மூன்று மாவடியில், மதுரை மக்கள் அழகரை எதிர்கொண்டு வரவேற்கும் எதிர் சேவை நடக்கிறது. அதைத் தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளும் கள்ளழகர், இரவில் தல்லாகுளம் பெருமாள் கோவிலை அடைந்து, அங்கு விடிய, விடிய அழகருக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம் நடைபெறும். இதைத் தொடர்ந்து நாளை (மே.5)அதிகாலையில் 5.45 மணிக்கு கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் வீற்றிருந்து வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைக் காண பல லட்சம் பக்தர்கள் மதுரையில் திரள்வார்கள் என்பதால் பலத்த பாதுகாப்புடன் தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துவருகிறது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து வைவை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *