கோவையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

“திமுக ஆட்சி என்றாலே மின்தட்டுப்பாடு ஏற்படும்”- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மின் தட்டுப்பாடு ஏற்படும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாங்கள் சட்டமன்றத்தில் பேசுவதை எல்லாம் நீக்கி விடுகிறார்கள். அரசாங்கத்திற்கு எதிராக நடக்கின்ற சம்பவங்களை நாங்கள் சட்டமன்றத்தில் எடுத்து வைத்து பேசினால் அதனை நீக்கி விடுகிறார்கள்.

சட்டம் ஒழுங்கு சரியில்லை என தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு போன்றவை நடைபெறுகிறது. விருதாச்சலம் பகுதியில் பள்ளி சிறுமிக்கு நடைபெற்ற, பாலியல் வன்கொடுமை குறித்து நாங்கள் தெரியப்படுத்தியபடுத்தினோம். ஆனால், முதலமைச்சர் சட்டமன்றத்தில் தகவல் கிடைத்ததும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கிறார். ஆனால் தகவல் கிடைத்ததும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை.  குற்றம் சாட்டப்பட்டவர் 30 வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பதால் அவரை தப்பிக்க வைக்க முயற்சி செய்தார்கள்.

ஆனால், அதிமுகவினரும் பொதுமக்களும் ஒன்று சேர்ந்ததால் அவர்மீது வேறு வழியில்லாமல் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளார்கள். சட்டப்பேரவையில் எனக்கு முன்னால் பேசியதும் எனக்கு பிறகு பேசியதும் உள்ளது. ஆனால், நான் பேசியதை நீக்கி விட்டார்கள். அங்கு ஜனநாயகம் கிடையாது. திமுகவினர் ஜனநாயகத்தை மதித்தால்தான் மக்கள் இவர்களை மதிப்பார்கள். இவர்கள் ஜனநாயகத்தை மதித்தால் தானே மற்றவர்களை பற்றி பேச முடியும். இவர்களுக்கு அந்த தகுதி இல்லை. தமிழகத்தில் நாங்கள் தடையில்லா மின்சாரம் கொடுத்து வந்தோம். விவசாயிகளுக்கு மும்முனை மின்சார இணைப்போம் வழங்கினோம். திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மின் தட்டுப்பாடு ஏற்படும்.

நிர்வாகத் திறமை இல்லாத காரணத்தினால்தான் தமிழகத்தில் மின்வெட்டு வந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. தமிழ்நாடு முழுவதும் ஒருவரே பார்களை எடுத்துக் கொண்டுள்ளார். அது யார் என அனைவருக்கும்தெரியும். அதிமுக ஆட்சி காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில்தான் மது விற்பனை நடைபெற்றது. அதனை மீறி செயல்பட்டால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும். ஆனால் தற்பொழுது 24 மணி நேரமும் செயல்பட்டு மதுகடைகள் வருகிறது.

தற்போது காவல்நிலையத்தில் புகார் அளித்தும்கூட வழக்குப்பதிவு செய்யப்படாமல் உள்ளது. இப்படி இருக்கும்போது போராடும் மக்களுக்கு எப்படி காவல்துறையில் நியாயம் கிடைக்கும். தமிழகத்தில் ஜனநாயகம் இறந்துவிட்டது. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடையாது. எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக ஊழல் பட்டியல் வெளியிடுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அது அண்ணாமலை வெளியிட்ட பிறகு தான் தெரியும் என்றார். இந்த நிகழ்ச்சியின்போது கோவை சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.வேலுமணி, அம்மன் அர்சுணன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *