ஜூன்.8ம் தேதி வேலூர் வருகிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா..! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!!

ஜூன்.5

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 8ம் தேதி தமிழகம் வருகிறார். வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் பாஜக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கவுள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடியின் 9 ஆண்டு ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறும் நோக்கத்தில், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கடந்த மே 30-ம் தேதி முதல் பாஜக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டது. ஜூன் 30-ம் தேதி வரை இந்தப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படவுள்ளது.

அதன்படி, தமிழகத்திலும் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்த பாஜக சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, வேலூரில் ஜூன்.8ம் தேதி பாஜக சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொள்ளவுள்ளார்.

பொதுக்கூட்டத்துக்கான முன்னேற்பாடுகள் குறித்து கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, துணைத் தலைவர் நரேந்திரன், மாவட்டத் தலைவர் மனோகரன் தலைமையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர். வேலூர் அடுத்த கந்தனேரியில் இந்த சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில், ஜூன்.8ம் தேதி வேலூர் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. பொதுமக்கள், தொண்டர்கள் அதிக அளவில் திரள்வார்கள் என்பதால் வேலூர் அடுத்த கந்தனேரி பகுதியில் பொதுக் கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். டெல்லியில் இருந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள் பொதுக்கூட்டம் நடக்க உள்ள இடத்தை ஏற்கெனவே ஆய்வுசெய்துவிட்டனர்.

விமானம் மூலம் சென்னை வரும் அமித் ஷா அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் கந்தனேரிக்கு வருகிறார். ஜூன்8ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை நடைபெறும் பொதுக் கூட்டத்தில், மத்திய அரசின் சாதனைகளையும், 10-ம் ஆண்டு தொடங்க உள்ளதையொட்டி அரசின் திட்டங்கள் குறித்தும் அமித் ஷா உரையாற்றவுள்ளார்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *