கோவையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – பெண் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 55வயது பெண் உயிரிழந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்துவருகிறது. இதையடுத்து, தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், சுகாதாரத்துறையின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, அரசு மருத்துவமனைகள், திரையரங்குகள், வணிக வளாகம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் தினமும் 10 முதல் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகிவருகிறது. கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 92 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில், கோவை உப்பிலிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 55 வயதான பெண் கடந்த மார்ச் மாதம் 17ஆம் தேதி நுரையீரல் உள்ளிட்ட பிரச்னைகளுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அப்போது அவருக்கு அங்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று உறுதியான நிலையில் அந்த பெண்ணை கொரோனா வார்டுக்கு மாற்றி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்றினால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *