அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

May 17,2023

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 38 சதவிகிதத்திலிருந்து 42 சதவிகிதமாக உயர்த்தி தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். விலைவாசி அதிகரித்து வரும் நிலையில் அரசின் இந்த செய்தி அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக வந்துள்ளது. இந்த அதிகரிப்பு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.04.2023 முதல் 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் தங்களை அர்ப்பணித்து செயல்படும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கினை முழுமையாக உணர்ந்துள்ள இந்த அரசு, அவர்களின் நலனை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது. இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து, கடந்த அரசு விட்டுச் சென்ற கடும் நிதிநெருக்கடி மற்றும் கடன் சுமை, கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்ட வருவாய் இழப்பு ஆகியவற்றுக்கு இடையேயும். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது.

இந்த வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து கனிவுடன் பரிசீலித்து, இந்த உயர்வினை 01.04.2023 முதல் செயல்படுத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதன்படி, தற்போது 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.04.2023 முதல் 42 சதவீதமாக உயர்த்தப்பட்டு வழங்கப்படும்.

இதனால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வால் ஆண்டு ஒன்றிற்கு தமிழ்நாடு அரசுக்கு 2,366.82 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் எனினும். அரசு அலுவலர்கள். ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இந்தக் கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும். மேலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து. எதிர்வரும் காலங்களிலும் ஒன்றிய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம், உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வைச் செயல்படுத்திடும்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 42 சதவிகித அகவிலைப்படியை பெறுகிறார்கள். கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் வரை 38% சதவிகிதமாக இருந்த அவர்களது அகவிலைப்படி, 2023 ஜனவரிக்கு பிறகு 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டு 42 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தற்போது மீண்டும் ஜூலை 2023 -ல் நான்கு சதவிகித அதிகரிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படி நடந்தால் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவிகிதமாக அதிகரிக்கும்.

தமிழக அரசு ஊழியர்கள், அவர்களின் மற்றொரு முக்கியமான கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள். அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக உள்ளது. பல மாநிலங்கள் இதை மீண்டும் அமல்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு ஊழியர்களும் இதற்காக காத்திருக்கிறார்கள். இருப்பினும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இதனை மீண்டும் அமல்படுத்தும் எண்ணம் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *