கடந்த 2012 ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் தமிழ்நாடு என்ற பெயர் நீக்கப்பட்டதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்து உள்ளார்.
அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது….
அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் இல்லை என இப்போது சிலர் சர்ச்சையை கிளப்புகின்றனர்.
அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி என்று தற்போது உள்ளது. அதை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் என எழுதினால் நீண்ட பெயராக உள்ளது.
பேருந்து முன் பக்கத்தில் படிக்க வசதியாக இல்லை என்ற காரணத்தினால் அதிமுக ஆட்சியிலேயே அது மாற்றப்பட்டது.
2012-லேயே நடந்த ஒன்றை 2025-ல் வந்து ஏதோ முக்கிய செய்தி போல சிலர் சர்ச்சையை கிளப்புகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிதி ஒதுக்கியதால் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு மக்களுக்கு சிறப்பான பேருந்து சேவை வழங்கப்பட்டு வருதிங.
அதிமுக காலத்தில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களிலும், தற்போது பேருந்து சேவையை நாங்கள் தந்து கொண்டிருக்கிறோம்.
எனவே பிரச்சினைகள் ஏதுமில்லாததால் போக்குவரத்து கழகத்தில் எதை குற்றம் சாட்டுவது என்று தெரியாமல், திடீரென்று தமிழ்நாடு இல்லை என குற்றத்தை கண்டுபிடித்து சொல்கின்றனர்.
மெட்ராஸ் மாகாணம் என இருந்த இந்த மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியதே நாங்கள் தான். இவர்கள் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.