71 ஆயிரம் பேருக்கு ஒரே நேரத்தில் பணி நியமன ஆணை – பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்..

ஒரே நேரத்தில் 71 ஆயிரம் பேருக்கு மத்திய அரசுப் பணிக்கான பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி முன்னெடுத்துள்ளார். ‘ரோஜ்கார்’ என்று அழைக்கப்படுகிற இந்த திட்டத்தை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதியன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது 75 ஆயிரம் பேருக்கு மத்திய அரசு வேலைக்கான பணி நியமன உத்தரவுகளை வழங்கினார். இளைய தலைமுறையினரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு முறையும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மத்திய அரசு துறைகளில் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று 71 ஆயிரம் பேருக்கு மத்திய அரசில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. பிரதமர் மோடி இன்று (13-ந்தேதி) காணொலிக்காட்சி வழியாக நடைபெறுகிற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். அதன்படி, ரயில் மேலாளர், ரயில் நிலைய அதிகாரி, சீனியர் வணிகவியல் மற்றும் டிக்கெட் கிளார்க், ஆய்வாளர், உதவி இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள், சுருக்கெழுத்தர்கள், இளநிலை உதவியாளர்கள், அஞ்சல் உதவியாளர்கள், வருமான வரி ஆய்வாளர்கள், வரி உதவியாளர்கள், மேற்பார்வையாளர்கள், உதவி பேராசிரியர்கள், ஆசிரியர்கள், நூலகர்கள், செவிலியர்கள், நன்னடத்தை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் நிரப்பப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து புதிதாக பணி நியமனம் பெறுபவர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். புதிதாக வேலையில் சேர்க்கப்படும் 71 ஆயிரம் பேரும், ‘கர்மயோகி பிரராம்ப்’ என்கிற ஆன்லைன் பயிற்சியின் மூலம் பயிற்சி பெற்றுக்கொண்டு பணியாற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த ஆன்லைன் பயிற்சியில் அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகள், மனித வள கொள்கைகள் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *