ஸ்டெர்லைட்-க்கு எதிரான போராட்டத்தில் வெளிநாட்டு நிதி… ஆளுநர் பரப்பரப்பு குற்றச்சாட்டு..!

சுற்றுச்சூழல், மனித உரிமை, காலநிலை என்று பல்வேறு காரணிகளை கூறி நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக பல தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

கூடங்குளம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார்.

இந்திய குடிமைப்பணித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடும் எண்ணித் துணிக’ நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. நிகழ்வில் மாணவர்களின் கேள்விகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விரிவாக பதிலளித்தார்.

நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக வெளிநாடுகளில் இருந்து திட்டங்கள் தீட்டப்பட்டு இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கில் பல செயல்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இதற்காக, பல கோடி ரூபாய் நிதி நம் நாட்டுக்குள் அனுப்பி வைக்கப்படுகிறது. இதுபோன்று நாட்டின் வளர்ச்சியை தடுக்கவும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவும் கொண்டுவரப்படும் நிதியை கட்டுப்படுத்த மத்திய அரசு எப்.சி.ஆர்.ஏ (FCRA) முறைப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல், மனித உரிமை, காலநிலை என்று பல்வேறு காரணிகளை கூறி நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக பல தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் நிதிகள் பலவும் இதுபோன்று வளர்ச்சிக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதாகவும், போராட்டங்கள் செய்யவும் அந்த நிதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் ஆண்டுக்கு 250 கோடி வரையில் வெளிநாட்டு நிதிகள் நாட்டுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்.

கேரள மாநிலம் விளிஞ்சம் துறைமுகம் கொண்டு வரும் பொழுது அதற்கு எதிராக மக்களை தூண்ட நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த துறைமுகம் வந்தால் மீன்வளம் பாதிக்கப்படாது என்று வல்லுனர்கள் உச்சநீதிமன்றம் உள்ளிட்டவை கூறியதை கூட மக்கள் ஏற்கவில்லை என்றும், அதேபோல் கூடங்குளம்,தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலையின் போது நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் மிகவும் வருத்தமானது என்று கூறிய அவர், ஆனால் அந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் நாட்டின் மொத்த காப்பர் உற்பத்தியில் 40 சதவீதம் அளவுக்கு பூர்த்தி செய்யப்பட்டு வந்தது என்றும் தெரிவித்தார். அதேபோன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு நாட்டுக்கு எதிராக நிதியை பயன்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *