வேங்கைவயல் வழக்கு- 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில், இரண்டாம் கட்டமாக 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கைவயலில் ஆதிதிராவிட குடியிருப்பு பகுதியில் உள்ள பட்டியலின மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளில் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் கண்டறியப்பட்டு 134 நாட்களைக் கடந்தும் தற்போது வரை இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. மேலும் இந்த வழக்கில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட குடிநீரை தடவியல் துறைக்கு அனுப்பப்பட்டு குடிநீர் தொட்டிகள் கலந்தது மனிதக் கழிவு தான் என்பதும் கண்டறியப்பட்டது. இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் இறையூர் வேங்கை வயல் கீழமுத்துக்காடு காவிரி நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 153 நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ள நிலையில், 119 நபர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என திட்டமிட்டு இருந்தது.

இந்நிலையில் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுமதி வேண்டும் என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தை சிபிசிஐடி போலீசார் நாடினார். இதையடுத்து நீதிமன்றம் முதற்கட்டமாக 11 பேருக்கும், இரண்டாவது கட்டமாக 10 பேர் என மொத்தம் 21 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரிகள் எடுக்க அனுமதி வழங்கியது. முதற்கட்டமாக அனுமதி வழங்கப்பட்ட 11 நபர்களில் வேங்கைவயலை சேர்ந்த எட்டு பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு ரத்த மாதிரிகள் கொடுக்க மறுப்பு தெரிவித்த நிலையில், வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த ஒரு காவலர் உட்பட மூன்று பேருக்கு டிஎன்ஏ பரிசோதனைக்கு ரத்த மாதிரிகள் எடுத்து சென்னையில் உள்ள அருகில் ஆய்வுகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று நீதிமன்றம் இரண்டாம் கட்டமாக அனுமதி வழங்கிய 10 பேருக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சட்டம் சார்ந்த மருத்துவ மற்றும் நச்சுயியல் துறையில் இன்று டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. இதில் வேங்கை வயலைச் சேர்ந்த இருவர், இறையூர் பகுதியைச் சேர்ந்த ஏழு பேர் மேல முத்தக்காடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் உள்ளிட்ட 10 பேர் ரத்த மாதிரிகளை கொடுத்த நிலையில், இனி வரக்கூடிய காலங்களில் அடுத்தடுத்து மொத்தமாக 119 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றத்தில் அனுமதி பெற்று சிபிசிஐடி போலீசார் ரத்த மாதிரிகளை எடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *