மோடியின் 9 ஆண்டு ஆட்சியில் 2,000 சட்டங்கள், விதிகள் நீக்கம் – மத்திய அமைச்சர் பெருமிதம்

நிர்வாகத்தை எளிமைபடுத்த கடந்த 9 ஆண்டுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டங்கள், விதிகளை மத்திய அரசு நீக்கியுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் யஷ்ராஜ் ஆராய்ச்சி அறக்கட்டளை (YRF) ஏற்பாடு செய்திருந்த விழாவில் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பங்கேற்று விருதுகளை வழங்கிப் பேசினார். அப்போது அவர் நாட்டின் நிர்வாகத்தை எளிதாக்கும் நோக்கில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கருத்துக்களை தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, “நாட்டின் நிர்வாகத்தை எளிதாக்கும் நோக்கில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல்படுகிறது. ஆட்சியையும், வணிகத்தையும் எளிதானதாக மாற்றும் நோக்கில் கடந்த 9 ஆண்டுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலாவதியான விதிகள் மற்றும் சட்டங்களை நீக்கியுள்ளது. காலனியாதிக்க மனோநிலை சட்டங்களை மாற்றுவதில் இதற்கு முந்தைய ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. அவர்களை போல் அல்லாமல் காலாவதியான விதிகள் மற்றும் சட்டங்களை நீக்குவதில் பிரதமர் மோடி உறுதியாக இருந்ததார்.

2014ஆம் ஆண்டு மே மாதம் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களில், அரசு அதிகாரிகளிடமிருந்து சான்றிதழ் பெறும் நடைமுறை நீக்கப்பட்டது. ஓய்வூதியம் பெறுவதில் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டதனால், மூத்த குடிமக்கள் வாழ்க்கைச் சான்றிதழ் பெறுவதில் இருந்த சிரமம் குறைந்துள்ளது.

பெரும்பாலான சேவைகள் இணைய வழியில் மாற்றப்பட்டதால் வெளிப்படைத்தன்மை அதிகமானது. சுகாதாரத் துறையில் ஏற்பட்ட தொழில்நுட்பத்தினால் கொரோனா காலத்தில் தொலைதூர மற்றும் கிராமப்புற பகுதிகளில் சுகாதார சேவைகளை வழங்க முடிந்தது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *