மு.க.ஸ்டாலினுக்கு எச்.ராஜா எச்சரிக்கை

மு.க.ஸ்டாலின் “ரொம்பப் பேசினால் அரசாங்கம் போய்டும் – எச். ராஜா எச்சரிக்கை

ஏப்ரல்.17

தமிழக அரசின் அகம்பாவம் உச்சகட்டத்திற்கு போயிருப்பதாகவும், ஸ்டாலின் ரொம்ப பேசினால் அரசாங்கம் போய்விடும் என்றும் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியில் சீருடையுடன் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, தேர்நிலை திடலில் ஆர்எஸ்எஸ் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, PFI (பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்) இந்தியா உட்பட 8 அமைப்புகள் மத்திய அரசால் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. தடைக்கு மறுநாள் தமிழ்நாட்டில் திருமாவளவன் , சீமான் ஆகியோர் மனித சங்கிலி நடத்த காவல்துறை அனுமதி கொடுத்தது.அது மனித சங்கலி அல்ல.. சங்கிலியின் ஒரு பிட்டுதான். ஆனால் தொடர்ந்து, ஆர் எஸ் எஸ் பேரணிக்கு இவர்கள் தடை விதித்து வந்தார்கள்.

சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி கொடுக்க அறிவுறுத்தியும், காசை கொண்டு உச்சநீதிமன்றம் சென்று தடை விதிக்க கூறினார்கள். ஆனால் உச்சநீதிமன்றம் தடை விதிக்க முடியாது என கூறிவிட்டது. எனக்கு பெரிய அதிர்ச்சி என்னவென்றால், தமிழ்நாடு அரசு, டிஜிபி யாருக்காக இருக்கின்றனர்? தேசதுரோகிகளுக்கா? பயங்கரவாதிகளுக்கா?. இந்த மாநில அரசு தேச துரோகிகளின் அரசு என நான் பலமுறை கூறி வந்துள்ளேன். அது நேற்று நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காவல்துறை மற்றும் அரசாங்கம் பிரிவினைவாத தீய சக்திகள். குறிப்பாக தனித் தமிழ்நாடு கேட்கும் தமிழ் தேசிய இயக்கங்கள், திருமாவளவன்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று கேட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், இன்று 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது. இனிமேலாவது திருந்துங்கள். காவல்துறை இன்று பல கட்டுப்பாடுகள் விதித்திருந்தது. தீய சக்திகளின், பிரிவினைவாதிகளின், பயங்கரவாதிகளின் ஏவல்துறையாக காவல்துறை மாறிக் கொண்டிருக்கிறது என்ற அய்யப்பாடு ஏற்படுகிறது. ராகுல் காந்தி ஒரு சாதியை இழிவாக பேசினார் என்பதால் அந்த சாதியை சேர்ந்த ஒரு நபர் வழக்கு தொடுத்தார். அதற்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி கொல்லிகட்டையால் தலையை சொறிந்து கொள்கிறார். பாஜகவிற்கு பெரிய பிரச்சார பீரங்கியே ராகுல் காந்திதான். ராகுல் காந்தி பேசிவிட்டு வந்தால் பத்தாயிரம் ஓட்டுக்கள் எங்களுக்கு அதிகமாகத்தான் விழும் என்று தெரிவித்தார்.

பாஜக தலைவர் திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்த எச்.ராஜா, அவர்கள் 17 பேரும் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்யட்டும், அண்ணாமலை சொல்லியது அனைத்தும் பொய் , இந்த சொத்து எதுவும் எங்களுடையது இல்லை என தாக்கல் செய்யட்டும். அண்ணாமலை பாஜகவின் மாநிலத் தலைவர். அவர் வெளியிட்டது பா.ஜ.க கட்சியின் கருத்துதான் என்றார்.

தொடர்ந்து, தமிழ்நாடு அரசு ஆளுநர் விவாதம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழக அரசின் அகம்பாவம் உச்சகட்டத்திற்கு போயிருக்கிறது. ஆளுநர் கையில் தகவலும், தரவுகளும் இருக்கின்ற காரணத்தால் பேசியிருக்கிறார். ஸ்டாலின் ரொம்ப பேசினால் அரசாங்கம் போய்விடும் என்றார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *