புதிய நாடாளுமன்றத் திறப்பு – குடியரசுத் தலைவர் திறந்துவைக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

மே.26

தலைநகர் டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், விருந்தினர்கள் என பல தரப்பினருக்கும் அழைப்பிதழ்களும் அனுப்பப்பட்டுவருகின்றன. இந்நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி திறப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றன. அதன் தொடர்ச்சியாக, நாடு முழுவதும் உள்ள சுமார் 20 எதிர்க்கட்சிகள் இந்த விழாவை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளன.

இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் எனவும், அதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டுமெனவும் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சி.ஆர் ஜெய சுகின் இந்த வழக்கைத் தொடுத்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறப்பது தொடர்பாக மக்களவை செயலகத்துக்கு ‘வழிகாட்டுதல் அல்லது ஆலோசனை’ வழங்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

மேலும், கடந்த 18-ம் தேதி மக்களவை செயலக ஜெனரல் வெளியிட்ட அறிக்கையில் வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்தாகவும், இந்த விழாவிற்கு குடியரசு தலைவருக்கு அழைப்பு கூட கொடுக்கப்படவில்லை என்றும், இதன் மூலம் மக்களவை செயலகம் அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் சி.ஆர்.ஜெயசுகின் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, அரசியலைமைப்பின் 79-வது பிரிவை மேற்கோள் காட்டியுள்ள அவர், நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதற்கும் ஒத்திவைப்பதற்குமான அதிகாரம் குடியரசுத் தலைவருக்கும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி, நரசிம்மா அடங்கிய அமர்வு முன்பு இன்று (மே.26) விசாரணைக்கு வருகிறது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *