பழங்குடியின மக்கள் போராட்டம் எதிரொலி – மணிப்பூரில் நீடிக்கும் ஊரடங்கால் ராணுவம் தீவிரக் கண்காணிப்பு..!

மே.10

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து கோரும் ‘மெய்தி’ இன மக்களுக்கு எதிராக பழங்குடியின மக்கள் நடத்திய போராட்டத்தால் கலவரம் வெடித்தது. இதையடுத்து, மணிப்பூரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கலவரத்தை ஒடுக்க ராணுவமும் வரவழைக்கப்பட்டது.

மணிப்பூரில் பெரும்பான்மையாக வாழும் மெய்தி இன மக்கள், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கக் கோரிவருகின்றனர். இவர்களுக்கு அந்த தகுதியை வழங்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து பழங்குடியின மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலானது கலவரமாக வெடித்தது.

இதையடுத்து, கலவரத்தை ஒடுக்க ராணுவம் வரவழைக்கப்பட்டது. 35 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, தற்போது மணிப்பூரில் மெல்லமெல்ல இயல்புநிலை திரும்பி வருகிறது. கலவரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட சுரசந்த்பூர், டெங்னோபால், பிஷன்பூர், கங்க்போக்பி ஆகிய மாவட்டங்களில் தற்போது அமைதி நிலவுகிறது.

இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், தற்போது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 1,700 பேர் இன்னும் வீடுகளுக்கு திரும்பாமல் உள்ளனர். இருப்பினும் மாநிலத்தில் இன்னும் ஊரடங்கு நீடிக்கும் நிலையிலும், மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வசதியாக இன்று காலை 5 மணி முதல் 11 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலவரக்காரர்களை கண்டதும் சுடுவதற்கான உத்தரவு, இணையதள சேவைக்கான தடை ஆகியவை இன்னும் அமலில் இருக்கிறது.

இது தொடர்பாக மாநில முதலமைச்சர் பிரேன்சிங் பேசுகையில், கலவரத்துக்கு பொறுப்பானவர்களை கண்டறிய உயர்மட்ட விசாரணை நடத்தப்படும். பிரச்சினையை தீர்க்க 24 மணி நேரமும் அரசு எந்திரம் இயங்கி வருகிறது. 50 கம்பெனி மத்திய ஆயுத போலீஸ் படையும், ராணுவமும், 30 ஆயிரம் மாநில போலீசாரும் சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. நிவாரண முகாம்களில் இருந்து சுமார் 20 ஆயிரம்பேர், வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். சுமார் 1,593 பேர் வெளிமாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். கலவரத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *