குழந்தை தத்தெடுப்பு -மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி

தனியாக வாழும் பெண் வேலைக்குச் சென்றாலும் குழந்தையை தத்தெடுக்கலாம்- மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி

ஏப்ரல்.15

வேலைக்கு சென்றாலும் தனியாக வாழும் பெண் ஒரு குழந்தையை தத்தெடுக்க தகுதியுடையவர்தான் என மும்பை உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

ஜல்கான் மாவட்டத்தில் உள்ள புசாவல் நீதிமன்றத்தில், ஷப்னம்ஜகான் அன்சாரி(வயது47) என்ற பெண் தனது தங்கையின் 4 வயது மகளை தத்தெடுக்க உரிமை கேட்டு விண்ணப்பித்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஷப்னம் ஜகான் அன்சாரி விவகாரத்து பெற்றவர் மட்டுமின்றி அவர் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். எனவே, அவரால் குழந்தையை பார்த்துக்கொள்ள முடியாது எனக் கூறி, மனுவை நிராகரித்தது. அதுமட்டுமின்றி, அவர் தத்தெடுத்த குழந்தை, தனது பெற்றோருடனே இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, ஷப்னம் ஜகான் அன்சாரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், கீழ்நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவி விபரீதமானது மற்றும் நியாயமற்றது என்று கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கவுரி கோட்சே தலைமையிலான மும்பை உயர்நீதிமன்ற அமர்வு, ஷப்னம் ஜகான் அன்சாரி, தனது தங்கையின் 4 வயது மகளை தத்தெடுக்க அனுமதி வழங்கியது.

இது தொடர்பான உத்தரவில் நீதிபதி கூறியதாவது:- குழந்தையின் உயிரியல் தாய் ஒரு இல்லத்தரசி மற்றும் வருங்கால வளர்ப்பு தாய் பணிபுரிந்து வருகிறார் என்ற கீழ் நீதிமன்றத்தின் ஒப்பீடு பழமைவாத கருத்து மனநிலையை பிரதிபலிக்கிறது. ஒற்றை பெற்றோர் தத்தெடுக்கும் பெற்றோராக இருக்க சட்டம் அங்கீகரிக்கும்போது, கீழ் நீதிமன்றம் இந்த அணுகுமுறை சட்டத்தின் நோக்கத்தை பொய்யாக்குகிறது. பொதுவாக ஒற்றை பெற்றோர் உழைக்கும் நபராக இருக்க வேண்டும். சில அரிதான விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், அவர் அல்லது அவர் யாராக இருந்தாலும் வேலை செய்யும் நபர் என்ற ஒரே காரணத்திற்காக வளர்ப்பு பெற்றோராக இருக்க தகுதியற்றவராக கருத முடியாது. எனவே அந்த பெண் தகுதியற்றவர் என்பதற்கு கீழ் நீதிமன்றம் கூறிய காரணம் சட்டவிரோதமானது, விபரீதமானது, நியாயமற்றது. எனவே, இந்த வழக்கில் கீழ் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *