கோவையில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரம் – மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

மே.8

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, மாநகராட்சிக்கு உட்பட்ட 6500 தெருக்களில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளர்கள் வீடுவீடாக தீவிர ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.

கோவை உட்பட தமிழகம் முழுவதும் கோடை மழை தீவிரமடைந்துள்ளது. கோவையில் கோடை மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புகள் அதிகம். அப்படி மழைநீர் தேங்கும் பட்சத்தில், அங்கு டெங்கு கொசு புழுக்கள் வளர வாய்ப்புள்ளது. இதைத் தடுக்கும் வகையில், கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 6,500 தெருக்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வின்போது, நல்ல தண்ணீர் தொட்டிகள், வீட்டில் தேவையற்ற பொருட்களை மழை நீர் படும்படியாக வைத்தல் போன்றவற்றை ஆய்வுசெய்து, அதில் அபேட் மருந்து ஊற்றியும், டயர், தேங்காய் மட்டை போன்ற தேவையற்ற பொருட்கள் இருந்தால் அதனை அப்புறப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும், டெங்கு தொடர்பாக மக்களுக்கு அவர்கள் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் என பல்வேறு இடங்களில் கட்டிடத்தின் மேல் பகுதியில் மழைநீர் தேங்கும் வண்ணம் இருந்தாலும் அல்லது குடிநீர் தொட்டி திறந்து இருந்தாலும் அதிலிருந்து கொசு புழுக்கள் வளர்வதற்குக் காரணமாக இருந்தால் அதனைக் கண்டறிந்து அதனை அழித்தும், கட்டிட உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தும் கோவை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *