பல்வீர்சிங்மீது வழக்குப்பதிவு

கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் – பல்வீர்சிங்மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு

ஏப்ரல்.18

திருநெல்வேலியில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த விவகாரத்தில் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஏ.எஸ்.பி பல்வீர் சிங்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பியாக பணியாற்றிவந்த பல்வீர் சிங், அப்பகுதியில் சின்ன குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வரும்பொழுது, அவர்களின் பற்களை பிடுங்கியும், வாயில் ஜல்லி கற்களை போட்டும் கொடூரமான தண்டனை வழங்கி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி போன்ற காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களின் பற்களை பல்வீர் சிங் பிடுங்கியதாகவும் சர்ச்சை வெடித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக சேரன்மகாதேவி சார் ஆட்சியர் விசாரணை நடத்தினார். அதையடுத்து, பல்வீர் சிங் மார்ச் 29-ம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் பணியாற்றி வந்த காவலர்கள் ராஜ்குமார், போகபூமன், சந்திரசேகரன், ராஜகுமாரி, ஏ.பெருமாள், என்.சக்தி நடராஜன், எம்.சந்தானகுமார், வி.மணிகண்டன் ஆகியோர் ஆயுதப்படைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொண்டு ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கான விசாரணை அதிகாரியாக முதன்மைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, கடந்த 9ம் தேதி நெல்லை மாவட்டம் வந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா, மாவட்ட ஆட்சியரிடம் சார்ஆட்சியரால் முதற்கட்ட விசாரணை நடத்தி சமர்பிக்கப்பட்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையை பெற்றுகொண்டார். இதைதொடர்ந்து, கடந்த 10ம் தேதி அமுதா ஐஏஎஸ் முதற்கட்ட விசாரணையை தொடங்கினார். அந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட நபர்கள் யாரும் ஆஜராகாததால் அமுதா ஐஏஎஸ் திரும்பி சென்றார். தொடர்ந்து, 2 ம் கட்ட விசாரணை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இரண்டாம் கட்ட விசாரணையின் முதல் நாளான நேற்றுஅம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்ட விசாரணை அலுவலகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா விசாரணையை தொடங்கினார். அவரிடம் பாதிக்கப்பட்ட நபரான சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்த சூர்யாவின், தாத்தா பூதப்பாண்டி, விகேபுரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் தாயார் ராஜேஷ்வரி, தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த கணேசன் மற்றும் 17 வயது மற்றும் 16 வயது இளம் சிறார்கள் இருவர் என மொத்தம் 5 பேர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

இந்நிலையில், விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், பல்வீர் சிங் மீது 506/1,326,324 (கொலைமிரட்டல், கையால் காயப்படுத்துதல்) உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *