பேராசிரியர் மீதான பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு – அடையாறு கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளின் போராட்டம் வாபஸ்

சென்னை அடையாறு கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 4 பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த 2 நாட்களாக மாணவிகள் நடத்திவந்த உள்ளிருப்புப் போராட்டம் வாபஸ் பெற்றப்பட்டுள்ளது.

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் ருக்மணிதேவி கல்லூரி கலை கல்லூரி இயங்கிவருகிறது. மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி முறையில் செயல்படும் இந்தக் கல்லூரியில் பரதநாட்டியம் உள்ளிட்ட கலைகள் பயிற்றுவிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தக் கல்லூரியில் உள்ள ஆசிரியர் மீது ஏராளமான மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இது வதந்தி என்றும் கூறப்பட்டு வந்தது. கலாஷேத்ரா சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முக்கிய கதாப்பாத்திங்களில் நடிக்க வேண்டுமானால், ஆசிரியரின் விருப்பங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று குறிப்பிட்ட ஆசிரியர் மிரட்டியதாகவும் மாணவிகள் புகார் தெரிவித்தனர்.

புகாருக்குள்ளான ஆசிரியர் சர்வதேச மகளிர் தினத்தன்று கலாஷேத்ராவில் கவுரவிக்கப்பட்டதால், அதிருப்தி அடைந்த மாணவிகள், இந்தியக் கலைஞர்களுக்காக அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ‘கேர்ஸ்பேசஸ்’ (c.a.r.e.spaces) எனும் அமைப்பின் மூலம் கலாஷேத்ராவில் நடந்து வரும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, குற்றச்சாட்டு தொடர்பாக ஆதாரங்களை திரட்டிய ‘கேர்ஸ்பேசஸ்’ அமைப்பு, தேசிய மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்தது.

அதன் அடிப்படையில், தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவிடம், தேசிய மகளிர் ஆணையம் புகார் அளித்தது. அதில், ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் கோரப்பட்டிருந்தது. இது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு தமிழக டிஜிபிக்கு, தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, பாலியல் அத்துமீறல் புகார் குறித்து விசாரணை நடத்துமாறு சென்னை காவல் ஆணையருக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட 24 வயது மாணவி ஒருவர், தனது பெயருக்கும், கல்லூரியின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக, வேண்டுமென்றே தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணை மற்றும் கலாஷேத்ரா அமைப்பு அளித்த விளக்க அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் பாலியல் புகார் குறித்த விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு பிறப்பித்த உத்தரவை தேசிய மகளிர் ஆணையம் திரும்பப்பெற்றது. கல்லூரியில் பாலியல் துன்புறுத்தல் ஏதும் நடைபெறவில்லை என நான்கு பேர் குழு அறிக்கை அளித்திருந்தது.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி, கல்லூரி மாணவ, மாணவிகள் கடந்த 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். மேலும், விசாரணை மேற்கொள்வதற்கான உத்தரவு திரும்ப பெறப்பட்டதற்கு கடும் கண்டனமும் மாணவிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மாணவிகளின் போராட்டத்தால், கலாஷேத்ரா அறக்கட்டளையின் ருக்மணிதேவி கல்லூரி வரும் ஏப்ரல் 6-ம் தேதி வரை மூடப்படுவதாக கல்லூரி முதல்வர் அறிவித்தார்.
இரண்டு நாட்களில் விடுதிகளை காலி செய்யுமாறு மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது. கல்லூரி மூடப்படும் நாட்களில் தேர்வுகள் இருந்தால் ஒத்திவைக்கப்படும் என்றும் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, பாலியல் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *