ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு – இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான மேல் முறையீட்டு வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற அமர்வு, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறி, இறுதி விசாரணையை ஏப்ரல் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்று ஜேசிடி.பிரபாகர் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, மேல் முறையீட்டு வழக்கை இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா? இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதா? என்பதை ஏப்ரல்.3ம் தேதி முடிவு செய்வதாக நீதிபதிகள் கூறியிருந்தனர்.

அதன்படி, இந்த மேல் முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது, மேல் முறையீட்டு வழக்கில் இறுதி விசாரணை நடத்தலாம் என்றும், அதற்குரிய தேதியை தெரிவிக்கும்படியும் இது தரப்பு வழக்கறிஞர்களையும் நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.

அதற்கு பதிலளித்த ன்னீர்செல்வம் அணி தரப்பு வழக்கறிஞர்கள், அதிமுகவில் தற்போது புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடப்பதாகவும், தங்கள் ஆதரவாளர்களின் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் என்பதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். ஆனால், தற்போதைய நிலையில் இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் குழப்பங்கள் ஏற்படும் என்பதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இடைப்பட்ட காலத்தில் கட்சியில் எடுக்கப்படும் முடிவுகள், இந்த வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனத் தெரிவித்தனர். பின்னர், இந்த மேல்முறையீட்டு வழக்குகளின் இறுதி விசாரணையை ஏப்ரல் 20ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *