இன்று உருவாகிறது வளிமணிடல கீழடுக்கு சுழற்சி..! தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை எச்சரிக்கை..!!

மே.6

தமிழக கடலோரப் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதனால், அப்பகுதிகளில் மே 7 ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், மே 8 ஆம் தேதியில் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மே 8, 9 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மே 6 மற்றும் மே 9ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 – 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் கூறியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

மேலும் இன்று குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தமிழக கடலோரப் பகுதிகள், தென்கிழக்கு – தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் தெற்கு பகுதிகள், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *