இந்திய உள்நாட்டு விமான சேவையில் 43% வளர்ச்சி- ஒரு ஆண்டில் 5.39 கோடி பேர் பயணித்து புதிய சாதனை

மே.24

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை நடப்பாண்டில் 43 சதவீதம் அளவுக்கு வளர்ச்சிபெற்று புதிய சாதனை படைத்துள்ளது. ஓராண்டில் உள்நாட்டு விமான சேவை மூலம் 5 கோடியே 39 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.

இந்தியாவில் விமான போக்குவரத்து சேவை எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கில் மத்திய அரசு உடான் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வகுத்து தீவிரமாக விமான நிலையங்கள், சேவைகளின் எண்ணிக்கையை அதிகரித்துவருகிறது. இந்நிலையில், உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்தாண்டு குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி அடைந்துள்ளதாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

பல்வேறு உள்நாட்டு விமான சேவை நிறுவனங்கள் அளித்துள்ள விவரங்களின்படி, நடப்பாண்டில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 5.39 கோடியை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 42.85% அதிகமாகும். முந்தைய ஆண்டில் உள்நாட்டு விமான சேவை மூலம் 3.52 கோடி பயணிகள் பயணித்திருந்தனர்.

மேலும், 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தைவிட 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 22.18% அளவிற்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை அதிகரித்துள்ளது. 2023 ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டு சேவை விமானங்கள் 0.47% அளவிற்கு மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் புகார் எண்ணிக்கை 10,000 பயணிகளுக்கு 0.28 பயணிகள் என்ற அளவில் மிகக் குறைவாகவே உள்ளது.

இது தொடர்பாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், ”விமானப் போக்குவரத்துத்துறையின் வளர்ச்சிக்காக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது. சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்துத் துறையில் இந்தியாவை முதன்மை நாடாக மாற்றும் நோக்கில் செயல்பட்டு வருகிறோம். உள்நாட்டு விமானப் போக்குவரத்துத்துறை தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதன்மூலம் நம் நாட்டின் பொருளாதாரம் வலுவடைவதோடு, நாடுமுழுவதும் உள்ள மக்களையும் இணைக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *