டாக்டர் ராமதாஸ் அளித்த பரபரப்பான பேட்டி…
நான் என்ன தவறு செய்தேன். கட்சிப் பதவியிலிருந்து என்னை ஏன் பதவி இறக்கம் செய்ய வேண்டும்? என அன்புமணி ராமதாஸ் கேட்டிருக்கிறார். இது முழுக்க முழுக்க மக்களையும், கட்சியினரையும் திசை திருப்பும் செயல். தான் செய்த தவறுகளை மறைத்து கட்சிக்காரர்களிடம் அனுதாபம் தேட முயற்சிக்கிறார் .
சொல்லப்போனால் தவறு செய்தது அன்புமணி அல்ல. அன்புமணியை என்னுடைய சத்தியத்தையும் மீறி 35 வயதிலேயே மத்திய கேபினட் அமைச்சராக்கியதுதான் நான் செய்த தவறு.
என்னை குற்றவாளியாக அடையாளப்படுத்தி கட்சியினரிடம் அனுதாபை தேட முயற்சிக்கும் அன்புமணிக்கு, நான் பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்.
அன்புமணி மீது ஒளிவு மறைவின்றி குற்றச்சாட்டுகளை உங்கள் முன் வைக்கிறேன்.
அன்புமணி தான் தவறு செய்தவர். தவறான ஆட்டத்தை ஆட துவங்கி முதலில் அடித்து ஆடியதும் அன்புமணி தான்.
நான் போகிற போக்கில் எதையும் சொல்லவில்லை ஆதாரபூர்வமாக தான் அனைத்தையும் சொல்கிறேன்.
பாண்டிச்சேரி பொதுக்குழுவில் மேடை நாகரிகமும், சபை நாகரிகமும் இல்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என நடந்து கொண்டது யார்?
வீட்டில் எனக்கு உதவியாகவும், கட்சியில் அன்புமணிக்கு உதவியாகவும் இளைஞர் அணி தலைவராக முகுந்தனை நியமித்து அறிவிப்பு வெளியிட்டேன். சுவற்றில் வீசிய பந்து போல உடனே மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தது சரியான செயலா?
மேடை நாகரிகம் சிறிதுமின்றி அனைவரின் முன்பும் காலை ஆட்டிக் கொண்டிருந்ததும், மைக்கை தூக்கி என் தலையில் போடாத குறையாக டேபிளில் வீசியது சரியான செயலா?
பனையூரில் அலுவலகம் திறந்து இருக்கிறேன் என தொலைபேசி எண்ணை தந்து, நீங்கள் இனி என்னை அங்கு வந்து பார்க்கலாம் என அன்புமணி சொன்னது சரியான செயலா?
நான்கு சோற்றுக்குள் பேசி முடிக்க வேண்டியதை நடுவிதிக்கு கொண்டு வந்தது யார்?
அழகான, ஆள் உயர கட்சியான பாமகவை ஒரு நொடியில் உடைத்தது யார்?
கடந்த 45 ஆண்டுகளாக இந்த இயக்கத்தை அண்ணா சொன்னது போல கடமை கண்ணியம் கட்டுப்பாட்டோடு நடத்தி வந்தேன். அதற்கு அன்புமணி கலைங்கத்தை ஏற்படுத்தி விட்டார். எதிர்மறையாளர்களால் எத்தனையோ இழிச் சொற்களையும் ஏளனங்களையும் இந்த ஊமை ஜனங்களுக்காக தாங்கிக் கொண்டவன் நான்.
ஆனால் வளர்த்த கடாவே மார்பில் வீறுகொண்டு பாய்ந்ததில் நான் நிலைகுலைந்து போய்விட்டேன் .
அன்புமணி தொடர்ந்து கட்சி வளர்ச்சிக்கு இடையூறாக இருந்து பல தவறுகளை செய்து வந்தார்.
பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ் குமரனை இயக்க வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ள சொன்னேன். தமிழ் குமரனுக்கு நியமன கடிதம் வழங்கினேன். அதை உடனே கிழித்து போட்டுவிட்டு, பதவியை ராஜினாமா செய் என அவரிடம் அன்புமணி தொலைபேசியில் கூறியுள்ளார்.
கட்சியின் பொதுக் குழுவில் பங்கேற்க மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்த தமிழ் குமரனை, அந்த கூட்டத்தில் பங்கேற்க கூடாது என அன்புமணி காலை என்னை அலைபேசியில் கூப்பிட்டு சொன்னார். இதனைக் கேட்டு அந்த குடும்பம் எவ்வளவு கலங்கி அவமானப்பட்டு இருக்கும்?
மேடையில் அல்ல, எதிர் வரிசையில் ஒரு ஓரமாக தமிழ் குமரனை அமர வைக்க கூட அன்புமணி அனுமதிக்கவில்லை.
தமிழ் குமரனுக்கு நடந்த அதே செயல், முகுந்தனுக்கு பொதுக்குழு மேடையிலேயே நடந்தது.
அனைவரும் பெற்ற தாயை கடவுள் என்போம். இந்தாண்டு பொங்கல் சமயத்தில் குடும்பத்துடன் அனைவரும் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது உனது இரண்டாவது மகளை இளைஞர் அணி தலைவராக்கி இருந்தால் நீ சும்மா தானே இருந்திருப்பாய்? என அன்புமணியின் தாயார் கேட்டபோது, அமர்ந்திருந்த இடத்தில் இருந்த பாட்டிலை தூக்கி பெற்ற தாயின் மீது வீசியவர் அன்புமணி நல்ல வேலையாக அது அவரின் மேல் படாது சுவற்றில் பட்டது.
இதெல்லாம் வெறும் சேம்பிள் தான்.
கட்சியின் நிர்வாகக் குழுவில் 19 பேர் உள்ளனர். அன்புமணி, அவர்களது கருத்தை கேட்பதும் இல்லை. கருத்தை வெளிப்படுத்தவும் அனுமதிப்பதில்லை.
2024 தேர்தலில் அதிமுக கூட்டணி வேண்டும் என்று விரும்பினேன். அன்புமணியும், எடப்பாடி பழனிசாமி இடம் பேசி கூட்டணியை உறுதி செய்திருந்தார். ஆனால், அன்புமணி மற்றும் சௌமியா இருவரும் திடீரென தைலாபுரம் வந்து பாஜக கூட்டணி தான் வேண்டும் என்று காலைப் பிடித்து அழுதனர்.
இருவரும் நீண்ட நேரம் அழுததால் என்னால் வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை.
அதிமுக-பாமக கூட்டணி அந்தக் கூட்டணி வேண்டாம் என்றார்கள்.
பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்றால் நீங்கள் தான் எனக்கு கொள்ளி போட வேண்டும் என்று அன்புமணி கூறினார்.
பாமக தலைவராக இருந்த ஜி.கே.மணியை கூட நீக்க வேண்டும் என்று சௌமியா அன்புமணி வந்து சொன்னார். இதை ஜி.கே.மணியிடம் சொன்னேன். பின்னர் ஒன்றரை மாதம் கழித்து அன்புமணிக்கு பட்டாபிஷேகம் நடத்தினேன்.
பாமக மூத்த நிர்வாகிகளை அன்புமணி மரியாதை குறைவாகவே நடத்தி வந்தார். குறிப்பாக மறைந்த காடுவெட்டி குருவை கூட அவர் உரிய மரியாதை உடன் நடத்தவில்லை.
இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார.