காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறுதான் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படம் என்று இயக்குநர் .கெளதமன் உறுதி படுத்தியுள்ளார்.
வ.கெளதமன் நாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் ‘படையாண்ட மாவீரா’.
படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் வசந்த பாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வ.கெளதமன் பேசியதாவது:
‘ இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் என் மீது மிகுந்த அக்கறை கொண்டு இந்தப் படத்தை உருவாக்க முன்வந்தார்கள். திரைத் துறையில் இன்னும் அதிகம் சாதிக்க வேண்டும் என விரும்பினார்கள். மக்களுக்கான கதையை அவர்களுக்கு வழங்க வேண்டும் என விரும்பினோம். இவற்றின் விளைவு தான் ‘படையாண்ட மாவீரா’.
எத்தனையோ படங்களுக்காகவும் எத்தனையோ பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுத்த போதெல்லாம் அமைதியாக எனக்கு எந்த சாயமும் பூசாமல் இருந்தவர்கள் காடுவெட்டி குரு பற்றியும், ஒரு சமுதாயத்தை பற்றியும் தவறாக திரைப்படத்தில் காட்டியபோது அதற்கு எதிராக நியாயமான கேள்விகளை எழுப்பியவுடன் என் மீது சாதி சாயம் பூசினார்கள்.
அந்த சமயத்தில் கௌதமன் கேட்டதில் என்ன தவறு என்று எனக்குத் தெரிந்த ஒரு ஊடக நண்பர், அப்படத்தின் இயக்குநரிடம் கேட்டபோது நான்தான் தாதா போன்று, ரவுடி போன்று காட்டிவிட்டேன், வேண்டுமானால் ‘சந்தனக்காடு’ எடுத்தது போன்று குரு அவர்களின் வாழ்க்கையை பற்றியும் கௌதமன் ஒரு படம் எடுக்கட்டுமே என்று கூறியுள்ளார். அந்த சவாலை ஏற்றுதான் இந்தப் படமே தொடங்கியது.
இது தனி சாதி படமல்ல, தமிழ் சாதி படமாக இருக்கும். சாதி, மதம் கடந்து மனிதனாக இருப்பவர்கள் யார் பார்த்தாலும் அரங்கம் மட்டுமல்ல, அவர்கள் ஆன்மாவும் அதிரும், அறம் சார்ந்த ஒரு மாவீரனை அவர்கள் தரிசிப்பார்கள்.’என்று நெகிழ்ந்தார், கவுதமன்.
—