‘விடாமுயற்சி’ ‘குட் பேட் அக்லி’ ஆகிய இரு சினிமாக்களில் ஒரே நேரத்தில் நடித்து முடித்து விட்டு கார் பந்தயத்தில் பங்கேற்க வெளி நாடுகளுக்கு பறந்துள்ளார், அஜித். திரைப் படத்தில் நடிப்பதற்கு சில மாதங்கள் இடைவெளி விட்டுள்ள அஜித், தனது புதிய படத்தை நவம்பர் மாதம் தொடங்குவதாக அண்மையில் அறிவித்தார்.
பல நாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் தனது அணியினருடன் பங்கேற்று வரும் அவர், சர்வதேச அளவில் பல பரிசுகளையும் வென்று வருகிறார். அவருக்கு ரசிகர்களும் ,ரேஸ் பிரியர்களும் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் பங்கேற்றுவரும் அஜித் , இப்போது இத்தாலியில் இருக்கிறார்.அங்குள்ள ஐமோலா சர்க்யூட் என்ற கார் பந்தய சுற்றுப்பாதையில் அமைந்துள்ள, உலக பார்முலா ஒன் சேம்பியன் அயர்டன் சென்னாவின் சிலையில், அவரது பாதங்களுக்கு முத்தமிட்டு மரியாதை செலுத்தினார்.இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
உலக கார் பந்தய சாம்பியன், அயர்டன் சென்னா, பிரேசில் நாட்டை சேர்ந்தவர். 13வது வயதிலேயே கார் ரேஸிங்கில் ஈடுபட்ட அவர், 1984 முதல் 1994 வரை 3 ஃபார்முலா ஒன் வேர்ல்ட் டிரைவர்ஸ் சாம்பியன் டைட்டிலை வென்றுள்ளார். 1994 ஆம் ஆண்டு இத்தாலியின் ஐமோலோ சர்க்யூட்டில் நடந்த சான் மெரினோ கிராண்ட் பிக்ஸ் கார் பந்தய போட்டியில் பங்கேற்றபோது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அந்த இடத்தில் அவரது உருவச்சிலை அமைக்கப்பட்டது. அந்த சிலைக்குத்தான் அஜித் குமார் மரியாதை செலுத்தினார்.
கார் பந்தயத்தில் அயர்டன் சென்னா, அஜித் குமாரின் மானசீக குரு என்பது குறிப்பிடத்தக்கது.
—